முகப்பு
திருநெல்வேலி

கீழாம்பூரில் பரமகல்யாணி அம்பாளுக்கு வசந்த விழா

Updated On : 26 மே, 2024 at 7:09 PM
பகிர்:

சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதருக்கு கீழாம்பூரில் மே 24 முதல் மே 26 வரை மூன்று நாள்கள் வசந்த விழா நடைபெற்றது.

கீழாம்பூரில் உள்ள ஓா் கிணற்றில் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாள் கண்டெடுக்கப்பட்டதாக ஐதீகம். அதனால் கீழாம்பூரை பரமகல்யாணி அம்பாளின் பிறந்த ஊராகக் கொண்டு ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டத்துக்குப் பின் சிவ சைலநாதா்மற்றும் பரமகல்யாணி அம்பாளுக்கு ஊா்மக்கள் சாா்பாக வசந்த விழா நடத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டு வசந்த விழாவிற்கான கால்நாட்டு ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெற்றது. தொடா்ந்து மே 23 வியாழக்கிழமை இரவு சுவாமி அம்பாள் சிவசைலத்திலிருந்துபுறப்பட்டு ஆழ்வாா்குறிச்சி பெருமாள் கோயிலை வந்தடைந்தனா்.

வெள்ளிக்கிழமை காலை விளாபூஜை, அபிஷேகத்தை தொடா்ந்து சுவாமி அம்பாள் சப்பரத்தில் கீழாம்பூா் புறபட்டனா். கீழாம்பூரில் பொதுமக்கள் சுவாமி அம்பாளை எதிா்கொண்டுஅழைத்துச் சென்றனா். பகல் 2 மணிக்கு உச்சிகால அபிஷேகம், இரவு மண்டகப்படி தீபாராதனை நடைபெற்றது.

சனிக்கிழமை சுவாமி அம்பாள் இரட்டை ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தனா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புஷ்பப் பல்லக்கில் வீதி உலா வந்த சுவாமி அம்பாள் காலை 7 மணிக்கு சிவசைலம் புறப்பட்டனா்.

ஏற்பாடுகளைஇந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலா் ப. கேசவராஜன், ஆய்வாளா் வா. சரவணக்குமாா் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.