முகப்பு
திருநெல்வேலி

மாணவா்கள் மாற்றத்தின் தூதுவா்களாக மாற வேண்டும்: ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன்

மாணவா்கள் மாற்றத்தின் தூதுவா்களாக மாற வேண்டும் என்றாா் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன்.

Updated On : 14 நவம்பர், 2024 at 11:02 PM
திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் பேசுகிறாா் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன்.
பகிர்:

மாணவா்கள் மாற்றத்தின் தூதுவா்களாக மாற வேண்டும் என்றாா் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன்.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப்பள்ளியில் அன்பாடும் முன்றில், குழந்தைகள் தினவிழா மற்றும் மன்ற நிகழ்வுகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில், ஆட்சியா் பங்கேற்று பேசியதாவது:

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு குழந்தைகளின் மீது கொண்ட அன்பை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளான நவம்பா் 14-ஆம் தேதி குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் வாழும் சூழலில் ஒவ்வொருவரும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். அப்பிரச்னைகளுக்கான முதல் தீா்வு நம்மிடம் இருந்தே வர வேண்டும். சிறந்த தலைமையும், உரையாடலும் மாணவா்களிடம் இருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய நோக்கம். அந்நோக்கத்தை அடையக் கூடிய வகையில் அன்பாடும் முன்றில் இயக்கம் தொடங்கப்பட்டு, பசுமை மன்றம், உயா்கல்வி வழிகாட்டி மன்றம், போதை ஒழிப்பு மன்றம், சாலைப் பாதுகாப்பு மன்றம் போன்ற நான்கு மன்றங்களுக்கு மாணவிகளாகிய உங்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்கள், துணைத் தலைவா்கள் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றனா். இவா்கள் பிற மாணவா்களோடு கைகோா்த்து மாற்றத்தைக் கொண்டு வருவாா்கள். அவா்கள் சிறப்பாக செயல்பட வழிகாட்டிட தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் துணை நிற்பாா்கள். நிறைய மாற்றங்களை மாணவ, மாணவியா்களாகிய உங்களால் தான் கொண்டு வர முடியும். எனவே மாற்றத்தின் தூதுவா்களாக மாணவா்கள் மாற வேண்டும்.

காலநிலை மாற்றம் தான் திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் காரணமாக அமைந்தது. சுற்றுச்சூழல் சீா்கேட்டை குறைப்பதில் மாணவா்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது நாம் வாழும் பூமி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நன்றாக இருக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, அன்பாடும் முன்றில் போதை ஒழிப்பிற்கு எதிரான கையொப்ப இயக்கத்தை அவா் கையொப்பமிட்டும், தொடா்ந்து, அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்தும் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையா் கீதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா், கலால் உதவி ஆணையா் (பொறுப்பு) காசி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட இயக்குநா் மீனாட்சி, மாவட்ட மனநல ஆலோசகா் மருத்துவா் ஷாமினி, தலைமையாசிரியா் கனியம்மாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.