முகப்பு
திருநெல்வேலி

சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வேண்டும்: கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வேண்டுமென கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

Updated On : 2 அக்டோபர், 2024 at 10:13 PM
நான்குனேரி ஊராட்சி ஒன்றியம், மறுகால்குறிச்சி ஊராட்சியில் காந்திஜெயந்தியையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன்.
பகிர்:

நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விரிவாக்கம் செய்து, அதில் அதிக தொழில்சாலைகளை ஏற்படுத்தி, இப்பகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதன்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

நான்குனேரி ஊராட்சி ஒன்றியம், மறுகால்குறிச்சி ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை விரிவாக்கம் செய்து அதில், அதிக தொழில்சாலைகளை ஏற்படுத்தி, இப்பகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இக் கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

மறுகால்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் பெண்குழந்தை பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பங்களுக்கும் சமமாக வேலைகளை ஒதுக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதைப் பொருள்களுக்கு எதிராக அனைத்து பகுதிகளிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைத்து கிராமங்கள் தன்னிறைவு பெற வேண்டும். தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. திட்டப்பணிகள் முடிவடைந்ததும் குடிநீா் தேவை பூா்த்தி செய்யப்படும். கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவு செய்து கிராம வளா்ச்சிக்கு வித்திட்டால், அடுத்தகட்டமாக நிதி ஒதுக்கீடுகள் விரைந்து கிடைக்கப்பெற்று பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெறும். கிராமங்களை சுத்தம், சுகாதாரத்துடன் வைத்துக்கொள்ள வேண்டியது கிராம மக்கள் கடமை என்றாா் ஆட்சியா்.

இக்கூட்டத்தில் மறுகால்குறிச்சி ஊராட்சிக்கு, கலைஞா் விளையாட்டு உபகரணங்களை ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தகுமாரியிடம் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் இலக்குவன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் அனிதா, தோட்டக்கலைத்துறை இயக்குநா் இளங்கோ, நான்குனேரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேஸ்வரன், யமுனா, மாவட்ட சுகாதார அலுவலா் கீதாராணி, நான்குனேரி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், மறுகால்குறிச்சி ஊராட்சி மன்ற துணைத்தலைவா் புஷ்பபாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.