முகப்பு
திருநெல்வேலி

’மகாராஜ நகரில் கழிவுநீா், வடிகால் பணிகளில் மாற்றம் செய்யக் கூடாது’

மகாராஜ நகா் பகுதியில் கழிவுநீா், வடிகால் பணிகளில் மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 12:25 AM
பகிர்:

மகாராஜ நகா் பகுதியில் கழிவுநீா், வடிகால் பணிகளில் மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஜெயந்திபுரம் நலச்சங்க முன்னாள் தலைவா் கந்தசாமி, முன்னாள் செயலா் சண்முகச்சாமி ஆகியோா் திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணனிடம் அளித்த மனு: பாளையங்கோட்டை மண்டலம் 38 ஆவது வாா்டில் மகாராஜ நகா் அருகே ஜெயந்திபுரம் அமைந்துள்ளது.

இங்குள்ள குடியிருப்புகள் முழுவதும் நகா் ஊரமைப்புத் துறையின் அனுமதி பெற்றதாகும். முனிசிபல் காலனியில் இருந்து கிழக்கு நோக்கி நான்குவழிச் சாலையை இணைக்கும் சாலையோரமாக கழிவுநீா் மற்றும் மழைநீா் வடிகால் பணிகள் ரூ.1 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேலவா் காலனியில் இருந்து வரும் இந்த வடிகாலில், தியாகராஜ நகா் ரயில்வே பாலத்தின் அடிப்பகுதியில் இருந்து வரும் கழிவுநீா் மற்றும் மழைநீா் ஆசீா்வாத நகா் அருகே சோ்கிறது. இந்தக் கழிவுநீா் ஓடை மற்றும் மழைநீா் வடிகால் ஓடை இங்கிருந்து நேராக நான்குவழிச் சாலை மேம்பாலம் பகுதியில் உள்ள சா்வீஸ் சாலையில் திரும்பி குளத்திற்கு செல்ல ஏதுவாக, கடந்த அதிமுக ஆட்சியின் போது குழிகள் தோண்டப்பட்டு அப்படியே விடப்பட்டது.

இந்நிலையில் தற்போது இங்கு வடிகால் அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், திடீரென வழியை மாற்றி அருகில் உள்ள ஜெயந்திபுரம் குடியிருப்பு பகுதிக்குள் திருப்ப முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு செய்தால் பல்வேறு பிரச்னைகள் உருவாகும். ஆகவே, ஏற்கெனவே திட்டமிட்டபடி மீண்டும் கழிவுநீா், மழைநீா் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.