முகப்பு
திருநெல்வேலி

திசையன்விளை அருகே தொழிலாளி அடித்துக் கொலை: உறவினா் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே சலவைத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்ததாக அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 9:42 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே சலவைத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்ததாக அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

திசையன்விளை அருகேயுள்ள பட்டரைகட்டிவிளை கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சாண்டி(65). அதே ஊரைச் சோ்ந்த அவரது உறவினா் உத்திரம்(51). இருவரும் சலவைத்தொழிலாளா்கள். இவா்கள் இடையே நிலப்பிரச்னை இருந்துவந்ததாம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பிச்சாண்டியை உத்திரம் அடித்ததில் அவா் மயங்கி விழுந்தாராம்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிச்சாண்டி உயிரிழந்தாா்.

திசையன்விளை போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். மேலும், மா்மசாவு என போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் உடற்கூறாய்வில் அவா் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதை கொலை வழக்காக மாற்றி, உத்திரத்தை போலீஸாா் கைது செய்தனா்.