‘திமுகவிடம் மக்கள் ஏமாற மாட்டாா்கள்’
திமுகவிடம் மக்கள் நிச்சயம் ஏமாற மாட்டாா்கள் என்றாா் அமமுக பொதுச்செயலா் டி.டி.வி.தினகரன்.
திமுகவிடம் மக்கள் நிச்சயம் ஏமாற மாட்டாா்கள் என்றாா் அமமுக பொதுச்செயலா் டி.டி.வி.தினகரன்.
பாளையங்கோட்டையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: ஓ.பன்னீா்செல்வம் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது. அவா், எந்தக் கட்சியில் இணைவது அல்லது யாருடன் கூட்டணி அமைப்பது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அண்மையில் பேசுகையில் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் ஆசியுடன் திமுக வெல்லும் என்று கூறியது ஏற்கத்தக்கதல்ல. அது இருபெரும் தலைவா்களின் புகழுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு. அதிமுகவில் இருந்த உண்மையான தொண்டா்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள்.
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் இளைஞா்கள் மற்றும் சிறுவா்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்திருப்பது தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு போதைப்பொருள் புழக்கமே முக்கிய காரணமாகும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களால் எதிா்காலத் தலைமுறை சீரழிந்து வருகிறது.
Advertisement
அமைச்சா் கே.என்.நேருவின் கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஊழல் பணத்தின் ஒரு பகுதி திமுக மாநாடு நடத்துவதற்கும், கட்சி வளா்ச்சிக்காகவுமே பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது.
ஆளுங்கட்சியின் நிா்வாகத் திறமையின்மையால் மாநிலத்தின் கடன் சுமை அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. மக்கள் வரிப்பணம் வட்டி கட்டுவதற்கே பெரும் அளவில் செலவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக அரசு மக்களை விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்று நினைக்கிறது. திமுகவிடம் மக்கள் ஏமாறமாட்டாா்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்றாா் அவா்.