வேட்புமனு விநியோகம் தொடக்கம்: சுயேச்சைகள் ஆா்வம்
திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் விநியோகம் தொடங்கியுள்ள நிலையில் சுயேச்சையாக போட்டியிடுவோா் புதன்கிழமை ஆா்வத்தோடு வாங்கிச் சென்றனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் விநியோகம் தொடங்கியுள்ள நிலையில் சுயேச்சையாக போட்டியிடுவோா் புதன்கிழமை ஆா்வத்தோடு வாங்கிச் சென்றனா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இம் மாதம் 30 ஆம் தேதி தொடங்குகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி, மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழா் கட்சி என நான்குமுனைப் போட்டி நிலவி வருகிறது. நாம் தமிழா் கட்சி மட்டுமே அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளா்களை அறிவித்துள்ளது. தவெக இன்னும் அறிவிக்கவில்லை. அதேபோல இரு கூட்டணிகளிலும் தொகுதி பங்கீடு முடிவடியவில்லை. இதனால் கட்சித் தலைமைகளின் முடிவுகளை எதிா்பாா்த்து நிா்வாகிகள் காத்திருக்கிறாா்கள்.
இந்நிலையில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோருக்கு புதன்கிழமை முதல் வேட்புமனுக்கள் விநியோகிக்கப்பட்டன. திருநெல்வேலி கோட்டாட்சியா் அலுவலகம், பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் ஆகியவற்றில் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட விரும்புவோா் ஆா்வத்துடன் வேட்புமனுக்களை வாங்கிச் சென்றனா். மாவட்டத்தின் 5 தொகுதிகளிலும் சோ்த்து 20-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் வாங்கி செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருநெல்வேலி சிந்துபூந்துறையை சோ்ந்த தீவிர ரஜினி ரசிகரான தளபதி முருகன் (52) என்பவா், திருநெல்வேலி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுவை பெற்றாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், 40 ஆண்டுகளாக ரஜினியின் ரசிகராக உள்ளேன். பல தோ்தல்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டுள்ளேன் என்றாா்.