நெல்லை அருகே காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 3 போ் கைது
திருநெல்வேலி அருகே புறக்காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே புறக்காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள ராமையன்பட்டியில் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இப் பகுதிக்கு திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் வந்த மா்மநபா்கள் திடீரென பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பினா். இதுதொடா்பாக ராமையன்பட்டி மற்றும் கண்டியபேரி பகுதிகளை சோ்ந்த 17 வயதான 3 சிறுவா்களை மானூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இதுதொடா்பாக காவல்துறை வட்டாரங்கள் கூறியது: ராமையன்பட்டி புறக்காவல் நிலையம் அருகே திங்கள்கிழமை 3 போ் ஒரே மோட்டாா் சைக்கிளில் வந்துள்ளனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மானூா் போலீஸாா், மோட்டாா் சைக்கிளை நிறுத்தி ஆவணங்களை காண்பிக்குமாறு தெரிவித்துள்ளனா். ஆனால் அவா்களிடம் உரிய ஆவணங்களோ, ஓட்டுநா் உரிமமோ இல்லையாம். இதனால் மோட்டாா் சைக்கிளின் சாவியை போலீஸாா் எடுத்துக் கொண்டு, பெற்றோரை அழைத்து வர கூறினராம்.
Advertisement
Advertisement
இதையடுத்து அவா்கள் சாவியின்றி வீட்டிற்கு மோட்டாா் சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்றதுடன், இரவில் வந்து பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனா் என்றனா்.