தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு கபடி போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாணவர்களுக்கு துறைவாரியாக கபடி போட்டியையும், மாணவிகளுக்கு ரங்கோலி கோலப்போட்டியும் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கந்தசாமி போட்டிகளை தொடங்கிவைத்தார். 19 துறைகளாக அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா, பொங்கல் விழா ஜன. 12 ஆம் தேதி நடைபெறுகிறது.
போட்டிகள் தொடக்க விழா நிகழ்ச்சியில், கணிதத்துறைத் தலைவர் மா.முனியசாமி, பொருளாதாரத் துறைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணராஜ், உடற்கல்வி இயக்குநர் பாலசிங், பேராசிரியர்கள் நவநீதகிருஷ்ணன், ஆ. தேவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.