தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகேயுள்ள ராஜபதி ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில் ஏழுநிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் அமைக்கும் பணி புதன்கிழமை (ஜன. 25) தொடங்குகிறது.
ராஜபதி ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் நவ கைலாய தலங்களில் எட்டாவது கேது ஸ்தலம் ஆகும். இந்த தலத்தில் கண்ணப்ப நாயனாருக்கென்று தனி சன்னதி உள்ளதால் இது தென் காளகஸ்தி என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தால் அழிந்தது. பின்னர் 2008ஆம் ஆண்டு சிவனடியார்களின் முயற்சியால் புதிய கோயில் மீண்டும் உருவாகி 30.05.2010 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2016ஆம் ஆண்டு கொடிமரம் நிறுவப்பட்டு சித்திரைத் திருவிழா நடைபெற்றது.
திருப்பணியின் தொடர்ச்சியாக 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் அமைக்கும் பணி இம்மாதம் 25ஆம் தேதி பூமி பூஜையுடன் தொடங்க உள்ளது.