தை அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி கடலில் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாள்களில் இந்துக்கள் நீர்நிலைகளில் புனித நீராடி வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி, தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை மற்றும் புதிய துறைமுக கடற்கரை பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் கடலில் புனித நீராடி வழிபாடு நடத்தினர். கோவில்பட்டி: கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாத நிலையிலும், ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.
இக்கோயில் தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் தை மற்றும் ஆடி அமாவாசை தினத்தன்று ஏராளமானோர் புனித நீராடி வழிபாடு செய்வது வழக்கம். தற்போது தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், ஏராளமானோர் தண்ணீர் பாட்டில், தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி வந்து நீராடி வழிபாடு நடத்தினர்.
கயத்தாறு கோதண்ட ராமேசுவரர் கோயில் முன்புள்ள சிற்றாறிலும் திரளானோர் புனித நீராடி வழிபாடு செய்தனர்.