கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயிலில் ஆடித்தவசு கால்நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சுவாமி, அம்பாளுக்கு திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கணபதி பூஜை நடைபெற்றது.
பின்னர் விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத கல்யாண முருகர், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, விநாயகர் சன்னதி முன்பு கால்நாட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து, நாட்காலுக்கு பக்தர்கள் கோமியம், மஞ்சள் பால் ஊற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இம்மாதம் 27ஆம் தேதி காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுவாமி, அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
6ஆம் தேதி சங்கரேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் ஆடித்தவசு விழா நடைபெறுகிறது. தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.