மனித சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் தயாரிப்புகளை அரசு தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் மழை வளம் குறைகிறது. நிலத்தடி நீர் பாதிக்கிறது. மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய இந்த பிளாஸ்டிக் தயாரிக்கும் மொத்த நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்.
தற்போது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர். இதனால் சாதாரண வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் மாணவர், மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தொண்டு நிறுவனங்கள் மூலம் பொதுமக்கள் கூடும் இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து துண்டுப் பிரசுரம் மற்றும் குறும்படம் வெளியிட வேண்டும்.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களை அரசு ஆய்வு செய்து பிளாஸ்டிக் உற்பத்தியை தடுப்பதுடன், அந்நிறுவனங்களையும் தடை செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.