இந்திய கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவு சார்பில், சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தும் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வஉசி கடற்கரை பகுதியில் சுத்தப்படுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
வஉசி துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் சு. நடராஜன் பணிகளை தொடங்கிவைத்தார். கடலோரக் காவல் படை தூத்துக்குடி பிரிவு கட்டளை அதிகாரி வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர், மாணவிகள் 700 பேர் கலந்துகொண்டு, கடற்கரையில் தேங்கிக் கிடந்த குப்பைகளை சேகரித்தனர். சுமார் 10 டன் குப்பைகளை அவர்கள் சேகரித்ததாகவும், அந்த குப்பைகள் லாரிகள் மூலம் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கடலோரக் காவல் படை கட்டளை அதிகாரி தெரிவித்தார்.