பங்குனித் திருவிழா ஆலோசனைக் கூட்டம்
கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயில் பங்குனித் திருவிழா ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயில் பங்குனித் திருவிழா ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கோட்டாட்சியர் அனிதா தலைமை வகித்தார். வட்டாட்சியர் ஜாண்சன் தேவசகாயம், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் பங்குனிப் பெருந்திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயில் விழா இம்மாதம் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதில், முக்கியத் திருவிழாவான ஏப். 13 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேரோட்டம், தீர்த்தவாரி, தெப்பத் திருவிழாக்களில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, போக்குவரத்து வழித்தட மாற்றம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவது, அரசுத் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், விழா காலங்களில் கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பது, விபத்துக்களை தவிர்ப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், தீயணைப்புத் துறையினரின் பணி, உணவு பாதுகாப்புத் துறையினரின் பணி உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், வட்டார மருத்துவ அலுவலர் ராமமூர்த்தி, மின்வாரிய உதவி கோட்ட செயற்பொறியாளர் சண்முகசுந்தரம், அரசு போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளர் ரமேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ், செண்பகவல்லி அம்மன் கோயில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியராஜன், கோயில் தலைமை எழுத்தர் ராமலிங்கம், நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்டான்லிகுமார், வருவாய் ஆய்வாளர் சிவராமன், கிராம நிர்வாக அலுவலர் போத்திராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.