குலசேகரன்பட்டினம் கோயிலில் திருப்பொற்சுண்ணம் இடித்தல் வைபவம்
குலசேகரன்பட்டினம் அருள்தரும் அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
குலசேகரன்பட்டினம் அருள்தரும் அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
இக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா ஏப்.20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாள்களில் காலை மற்றும் இரவில் சுவாமி அம்பாள் கேடயச்சப்பரத்தில் திருவீதியுலா, ஆவாகனச் சீவிலி ரிஷப வாகனத்தில் ஸ்ரீபெலிநாதர் திருவீதியுலா, மாலை நேரங்களில் தேவாரப் பண்ணிசை, சமய சொற்பொழிவு ஆகியன நடைபெற்றன.
ஏப்.25 ஆம் தேதி திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியும், ஏப்.26 ஆம் தேதி காலையில் நடராஜமூர்த்தியை படி இறக்குதல், இரவில் நடராஜமூர்த்தி சிவப்பு சாத்தியில் திருவீதியுலாவும், ஏப்.27 ஆம் தேதி வெள்ளை மற்றும் பச்சை சாத்தியில் திருவீதியுலாவும், மாலையில் கங்காளநாதர் சந்திரசேகரர் திருவீதியுலாவும் நடைபெற்றது.
ஏப்.29 ஆம் தேதி காலை 7 மணிக்கு திருப்பொற்சுண்ணம் இடித்தல் வைபவம் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சுவாமி கேடயத்திலும், அம்பாள் பல்லக்கிலும் திருவீதியுலா நடைபெற்றது.
ஏற்பாடுகளை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா.பாரதி மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்திருந்தனர்.