தூத்துக்குடி மாவட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, பாரதிய கிசான் சங்கத்தினர் திங்கள்கிழமை கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2016-17ஆம் ஆண்டுக்குரிய பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக வழங்கவேண்டும், வெங்கடாசலபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விவசாயிகள் 70 பேருக்கு மேல் பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
மேலும், கோவில்பட்டி வட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் எவ்வித காலதாமதமுமின்றி உடனடியாக பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய கிசான் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் ரெங்கநாயகலு தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் பரமேஸ்வரன், இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்புக் குழுத் தலைவர் முருகன் உள்பட விவசாயிகள் திரளானோர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் மண்டியிட்டு கையில் துணி ஏந்தி பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் விஜயாவிடம் அளித்துவிட்டு போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.