தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான புத்துணர்வு சுற்றுலா
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான புத்துணர்வு சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான புத்துணர்வு சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை புத்துணர்வு சுற்றுலா அழைத்து செல்லும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட புத்துணர்வு சுற்றுலா வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கிவைத்து சுற்றுலா செல்லும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மனவளர்ச்சி குன்றிய ஆரம்ப நிலை குழந்தைகளுக்கு புத்துணர்வை ஏற்படுத்தும் வகையில், அரசின் உத்தரவின்படி மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், புத்துணர்வு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய ஆரம்பநிலை பயிற்சி மைய குழந்தைகள், காது கேளாதோர் குழந்தைகள், குழந்தைகளின் பெற்றோர்கள், சிறப்பாசிரியர்கள் என 40 நபர்கள் புத்துணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். இவர்கள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, கயத்தாறு வீரபாண்டிய கட்டப்பொம்மன் மணிமண்டபம், எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த இல்லம், பாரதியார் நினைவு மணிமண்டபம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வீரப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மு. ஜெயசீலி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.