ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழாவை முன்னிட்டு, மாலை 5 மணிக்கு கொட்டாரக்குறிச்சி விஸ்வகர்மா குடியிருப்பில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் ஆலயத்துக்கு அருள்மிகு விநாயகர் எழுந்தருளினார். தொடர்ந்து யாக பூஜைகள் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு அபிஷேகமும், இரவு 9 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. இதையடுத்து இரவு 9.30 மணிக்கு மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து பூங்கோயில் ரதத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
ஏற்பாடுகளை விக்னேஷ்வர பட்டர், செயல் அலுவலர் (பொ) கிருஷ்ணமூர்த்தி மற்றும் மண்டகப்படிதாரர்களான ஆறுமுகமங்கலம், கொட்டாரக்குறிச்சி விஸ்வகர்மா சமுதாய மக்கள் செய்திருந்தனர்.