வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ. 2 ஆயிரம் நிதி வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் பணியை ஓட்டப்பிடாரத்தில் கண்காணிப்பு அலுவலர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், கைத்தறி, கட்டுமான தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், துப்புரவு, மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினை கலைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளர் குடும்பங்கள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொண்டு இம்மாதம் இறுதிக்குள் பயனாளிகளின் வங்கி கணக்கில் தலா ரூ. 2 ஆயிரம் செலுத்துவது தொடர்பான பணிகளில் அரசுப் பணியாளர்கள், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இப்பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சஜ்ஜன் சிங் ஆர். சவாண், ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
பயனாளிகள் தேர்வு செய்தல் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், அப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளை அவர்கள் கேட்டுக் கொண்டனர். அப்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மகளிர் திட்ட இயக்குநர் ரேவதி, அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.