தாய், சகோதரியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிவிளை வடக்கு தெருவைச் சேர்ந்த ஜேசு மிக்கேல் மனைவி பிரான்சிகோ மேரி (80). இவரது மகன் அந்தோணி தங்கதுரை, மகள் ஜான்சிராணி (45).
சொத்து பிரச்னை தொடர்பாக அந்தோணி தங்கதுரைக்கும், அவரது தாய் பிரான்சிகோ மேரிக்கும் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிரான்சிகோ மேரி மற்றும் ஜான்சிராணியை அரிவாளால் வெட்டிவிட்டு அந்தோணி தங்கதுரை தப்பி ஓடிவிட்டாராம்.
இதில், பிரான்சிகோ மேரி சம்பவ இடத்திலும், ஜான்சிராணி மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக தட்டார்மடம் போலீஸார் வழக்குப் பதிந்து அந்தோணி தங்கதுரையை கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கெளதமன் குற்றம்சாட்டப்பட்ட அந்தோணி தங்கதுரைக்கு மூன்று ஆயுள் தண்டனையும், ரூ. 3780 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.