தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் தாமஸ் பயாஸ் அருள் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகப் பணியாற்றி வருபவர் தாமஸ் பயாஸ் அருள். பெங்களூருவில் உள்ள ஞானபாரதி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக தாமஸ் பயாஸ் அருள், அவரது மனைவி அருணா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தாமஸ் பயாஸ் அருளை பணயிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திங்கள்கிழமை உத்தரவிட்டார். தனது நண்பர் ஒருவருக்கு குழந்தையை தத்து எடுப்பதற்காக பெங்களூரு சென்ற நிலையில், அந்தக் குழந்தை கடத்தப்பட்டது என்பது தெரியவந்ததால் தாமஸ் பயாஸ் அருளும், அவரது மனைவி அருணாவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.