தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பரிசு வழங்கினார்.
தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குரல் மாத இதழ் சார்பில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பாக தேர்வு பெற்ற நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு, மாநில அளவில் சிறப்பாக தேர்வு பெற்ற நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் 47 குழந்தைகளுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கி பாராட்டினார். மாநகராட்சி ஆணையர் வீ.ப. ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குரல் மாத இதழ் பதிப்பாளர் மற்றும் ஆசிரியர் சீத்தாராமன், தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் சண்முகம், நிர்வாகிகள் சீனி அஜ்மல்கான், கண்ணன், திருநெல்வேலி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் காளிமுத்து, தமிழ்நாடு நகராட்சி ஆணையாளர்கள் சங்க மாநிலச் செயலர் முருகேசன், தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் பிரின்ஸ் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.