பொள்ளாச்சி சம்பவம் குறித்து தனி நீதிமன்றம் அமைத்து, பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றார் மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: பெண்கள் தொடர்பான வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடக் கூடாது என உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கான தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிட்டு இருப்பதும், தொடர்ந்து காவல்துறை பெயரை வெளியிட்டு வரும் செயல், இனிமேல் யாரும் புகார் அளிக்க முன்வரக் கூடாது என்பதற்காகவும், அவர்களை அச்சுறுத்துவதற்காகவும்தானே தவிர, வேறு எதற்கும் இல்லை.
இந்த விசாரணையில், எந்தப் பெண் அதிகாரியும் ஈடுபடுத்தப்படவில்லை. பொள்ளாச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணையையும் தாண்டி, தனி நீதிமன்றம் அமைத்து பாதிக்கப்பட்ட பெண்களின் புகார்களை விசாரிக்க வேண்டும். இதுவரை உள்ளூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காவல்துறையும், அரசும் யாரை காப்பாற்ற முயற்சிக்கிறது எனத் தெரியவில்லை என்றார் அவர்.