தூத்துக்குடி மாவட்டம், வேம்பார், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.20 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
விளாத்திகுளம் துணை வட்டாட்சியர் சேதுராமன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படைக் குழுவினர் வேம்பார் சோதனைச் சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே கேரள மாநிலம், பத்தினம்திட்டாவை சேர்ந்த சாகுல்ஹமீது மகன் சபீக் என்பவர் சென்ற காரில் உரிய ஆவணங்களின்றி ரூ. 2 லட்சத்து 18 ஆயிரம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல, ஓட்டப்பிடாரம் வாகனச் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை துணை வட்டாட்சியர் பாக்கியலட்சுமி தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் வாகனச் சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியே தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் வேல்முருகன் என்பவர் சென்ற காரில் ஆவணங்களின்றி ரூ. 1 லட்சத்து 2 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் கிளைக் கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டது.