கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, கணபதி ஹோமம், சிறப்பு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து சொர்ணமலை கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் யாகசாலை பூஜை நடைபெற்றது. முற்பகல் 11 மணிக்கு யாகசாலையிலிருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோயில் பிரகாரம் வழியாக வந்து, மூலவர் கதிர்வேல் முருகர், விநாயகர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி விமானங்களுக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
விழாவில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், மண்டகப்படிதாரர் காளிராஜன் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, கோயில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.