மக்களவைத் தேர்தலில் பாதுகாப்பு அளிப்பது குறித்து திருச்செந்தூரில் காவல்துறையினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் ஆகிய உட்கோட்டங்களில் பணிபுரியும் காவல்துறையினர் மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமை வகித்தார்.
தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் தேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சியினர் முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும்; பாதுகாப்புப் பணியில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும், பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதியில் கூடுதல் பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்டவை குறித்தும் காவல்துறையினருக்கு எஸ்.பி. ஆலோசனை தெரிவித்தார். இக்கூட்டத்தில், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பொன்ராமு, துணை கண்காணிப்பாளர்கள் திருச்செந்தூர் பாரத், ஸ்ரீவைகுண்டம் சகாய ஜோஸ், சாத்தான்குளம் பாலச்சந்திரன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் உள்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.