தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது நிகழ்ந்த கலவரத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 நபர்களுக்கு மருத்துவ செலவுக்கான ரூ.1.80 லட்சத்துக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திங்கள்கிழமை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, பட்டா பெயர் மாற்றம் கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டி கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.
பின்னர் மாற்றுத் திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்கனை பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது நிகழ்ந்த கலவரத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தூத்துக்குடி கருணாநிதி நகரைச் சேர்ந்த மகாராஜன் மகன் விஜயகுமாருக்கு பல்வேறு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கான காசோலை, தூத்துக்குடி கிழக்கு காமராஜர் நகரைச் சேர்ந்த ஞானமணி மகன் சேர்ம ராஜுக்கு ரூ.70 ஆயிரத்துக்கான காசோலை என மொத்தம் 2 பேருக்கு ரூ.1.80 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தேசிய ஊட்டசத்து மாதத்தை முன்னிட்டு அமைக்கப்பட்ட ஊட்டசத்து உணவு வகைகள் கண்காட்சியினை ஆட்சியர் தொடங்கி வைத்து, பார்வையிட்டு பொது மக்களுக்கு ஊட்டசத்து பானத்தை வழங்கினார். கண்காட்சியில் முருங்கை சூப், பாசிப்பயறு பாயசம், கம்மங் கூழ், கேப்பை கூழ் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருள்கள் இடம் பெற்றிருந்தன.
நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கர நாராயணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.