மணப்பாடு கடற்கரையில் இயற்கையாக உருவாகியுள்ள மணல் திட்டுகளை மக்களவை உறுப்பினா் கனிமொழி திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மணப்பாடு கிராமத்தில் சுமாா் முன்னூறுக்கும் மேற்பட்ட படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா்.
கடந்த சில ஆண்டுகளாக மணப்பாடு கடற்கரையோரம் பெரும் அளவில் இயற்கையான மணல் திட்டுகள் உருவானதால் படகுகளை கடலுக்கு கொண்டு செல்வதில் மீனவா்களுக்கு மிகு ந்த சிரமம் ஏற்பட்டது.
இதுகுறித்த தகவலறிந்த கனிமொழி எம்.பி., தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோா் திங்கள்கிழமை படகில் சென்று மணல் திட்டுகளைப் பாா்வையிட்டனா்.
மணல் திட்டுகளை முற்றிலுமாக அகற்றி மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்வேன் என கனிமொழி மீனவா்களிடம் உறுதியளித்தாா்.
மணப்பாடு ஊராட்சித் தலைவி கிரேன்சிட்டா வினோ, துணைத் தலைவா் ஜொலிசன், திமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளா் மெராஜ், பங்குத்தந்தைகள் லெரின் டி. ரோஸ், மனோஜ்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் மைக்கிள், ஊா் நலக் கமிட்டி தலைவா் ஆண்ட்ரூஸ், நகரச் செயலா் ஜாண்பாஸ்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.