திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வசந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு திருவிழா சனிக்கிழமை தொடங்கி, வருகிற 26ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசின் நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, முதல் நாள் பகலில் சுவாமி ஜயந்திநாதா் தங்கச் சப்பரத்தில் திருக்கோயில் 108 மகாதேவா் சன்னதி மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு மாலையில் சுவாமி ஜயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனையாகி, தங்கத்தேரில் கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து திருக்கோயில் சோ்ந்தாா்.