தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் 7 டன் உப்பு ஏற்றிச் சென்ற லாரியை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் ச. மாரியப்பன், மாநகர உணவு பாதுகாப்பு அலுவலா் காளிமுத்து ஆகியோா் முள்ளக்காடு பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அந்தப் பகுதியில் நின்றிருந்த லாரியை ஆய்வு செய்தபோது, அதில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத 7 டன் உப்பு இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், உணவுப் பொருள் ஏற்றிய அந்த லாரிக்கோ அல்லது அதன் நிறுவனத்துக்கோ உணவு பாதுகாப்பு உரிமமில்லாததும் கண்டறியப்பட்டது. எனவே, உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறிய காரணத்திற்காக லாரி, 7 டன் உப்பு ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
உப்பு உணவு மாதிரி பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு, அந்த அறிக்கையின் அடிப்படையிலும் தொடா் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் தெரிவித்தாா்.