தூத்துக்குடியில் கருப்புப் பூஞ்சைக்கு பெண் பலி
கருப்புப் பூஞ்சை நோய்க்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கருப்புப் பூஞ்சை நோய்க்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி சோபியா(40). இவர் கரோனா தொற்று காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமாகி வீடு திரும்பினார்.
இந்நிலையில், இவருக்கு திடீரென கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக இவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் கூறியது: எந்த நோயாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.
அவ்வாறு ஆரம்பத்திலே சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது, விரைவில் குணமாக அதிக வாய்ப்புள்ளது.
ஆனால், பலர் நோய் தாக்கம் அதிகரித்த பின்னர் இறுதிக் கட்டத்திலேயே இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். இதை தவிர்க்க வேண்டும். தற்போது கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர் என்றார்.