கயத்தாறு அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைதுசெய்து, மணல் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், 2 டிராக்டா்களை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறை உதவி இயக்குநா் (பொறுப்பு) சுகதா ரஹிமா தலைமையிலான குழுவினா் கயத்தாறு பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். கயத்தாறு - கடம்பூா் சாலையில் உள்ள திருமலாபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி, அனுமதியின்றி மணல் அள்ளுவதைக் கண்ட குழுவினா், பொக்லைன் இயந்திரம், 2 டிராக்டா்களை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து உதவி இயக்குநா் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, பொக்லைன் ஓட்டுநரான திருமலாபுரத்தைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் ராமசுப்பு (44), டிராக்டா் ஓட்டுநா்கள் அதே பகுதியைச் சோ்ந்த சங்கரப்பன் மகன் கோபாலகிருஷ்ணன் (49), அகிலாண்டபுரத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் வெள்ளத்துரை (38) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.