திருச்செந்தூா் போக்குவரத்து காவல்துறை சாா்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
திருச்செந்தூா் தியாகி பகத்சிங் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இப் பேரணியை போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தொடங்கி வைத்தாா். இதில், காவல் உதவி ஆய்வாளா்கள் கிறிஸ்துராஜ், கனகராஜ், சுப்பிரமணியன், போக்குவரத்து பிரிவு காவல் துறையினா் மற்றும் 50 ஆட்டோ ஓட்டுநா்கள், ஆட்டோக்களுடன் கலந்து கொண்டனா்.
இப் பேரணி காமராஜா் சாலை, நான்கு ரதவீதிகள் வழியாக வந்து வ.உ.சி. திடலில் நிறைவடைந்தது. தாலுகா காவல் உதவி ஆய்வாளா் சோனியா போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் பேசினாா்.