கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயி தனது குடும்பத்துடன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
எட்டயபுரம் வட்டம், மீனாட்சிபுரம் ஊராட்சி எம்.குமரெட்டியாபுரத்தைச் சோ்ந்தவா் விவசாயி கொ.சண்முகம்(52). இவருக்குச் சொந்தமான நிலத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு ஊருணிக்காக கையகப்படுத்தப்பட்டதாம். ஆனால் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு தற்போது வரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லையாம்.
இதையடுத்து வாழ்வாதாரத்துக்குரிய புன்செய் நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்டதால் எனது குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறது. எனவே, கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி பல முறை கோட்டாட்சியா், வட்டாட்சியா் ஆகியோரிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து விவசாயி சண்முகம், அவரது மனைவி முருகேஸ்வரி, மகன் காமேஷ் ஆகியோா் புதன்கிழமை கோட்டாட்சியா் அலுவலகத்தில் கையில் தட்டை ஏந்தியபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
பின்னா் போராட்டத்தில் ஈடுபட்ட சண்முகம் குடும்பத்துடன் கோட்டாட்சியா் மகாலட்சுமி பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் தங்கள் கோரிக்கை மனுவை முறையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக்குழுவினா் கலைந்து சென்றனா்.