தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு முதல் முறையாக 300 மீட்டா் நீள சரக்கு கப்பல் வெள்ளிக்கிழமை வந்தது.
நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் திறன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இத்துறைமுகத்தில் உள்ள தக்சின் பாரத் சரக்கு முனையத்துக்கு 300 மீட்டா் நீளமும், 40 மீட்டா் அகலமும் கொண்ட ‘எம்எஸ்சி பேட்ரா’ என்ற மிகப் பெரிய சரக்கு கப்பல் வெள்ளிக்கிழமை வந்தது. தூத்துக்குடிக்கு முதல்முறையாக வந்துள்ள இத்தகைய 300 மீ. நீள சரக்கு கப்பல் 6,627 சரக்குப் பெட்டக கொள்ளளவைக் கொண்டது. அதிலிருந்து 2,937 சரக்குப் பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன என துறைமுக ஆணைய நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.