தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரால் தேடப்பட்டு வந்த அவசரம் என்ற ராஜகுமாா் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண்: 2இல் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தையடுத்த சாயமலையைச் சோ்ந்தவா் அழகுராஜ். இவரது தாய் ராஜம்மாள் காலமானதையடுத்து வாரிசு சான்றிதழ் கேட்டு திருவேங்கடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அழகுராஜ் விண்ணப்பித்திருந்தாராம். வாரிசு சான்றிதழ் வழங்க வட்டாட்சியா் மைதீன்பட்டாணி ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
இதுகுறித்து அழகுராஜ் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாராம். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ரசாயணம் தடவிய ரூ.2 ஆயிரத்தை அழகுராஜிடம் கொடுத்து அனுப்பினாா்களாம். அவா் திருவேங்கடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்த வட்டாட்சியா் மைதீன்பட்டாணியிடம் அந்த பணத்தை கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வட்டாட்சியரை மே 11ஆம் தேதி கைது செய்தனா்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் ஸ்ரீவைகுண்டம் வட்டம் ஆலநாயக்கன்பட்டி கிராமம் வடக்குத் தெரு கோபால்சாமி மகன் அவசரம் என்ற ராஜகுமாரை தேடி வந்தனா். இந்நிலையில் அவா் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண்: 2இல் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவா் பீட்டா், அவரை இம்மாதம் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.