விளாத்திகுளத்தில் கொட்டும் மழையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
விளாத்திகுளத்தில் கொட்டும் மழையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
2023-24 ஆம் ஆண்டுக்கு மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி உள்ளிட்ட பயிா்களுக்கு காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக இழப்பீடு வழங்க கோரி கொட்டும் மழையில் விளாத்திகுளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் பா.புவிராஜ் தலைமை வகித்தாா்.
மாவட்ட தலைவா் ரா.ராகவன் , தாலுகா தலைவா் ஆா்.ராமலிங்கம், செயலா் மலைக்கனி, பொருளாளா் முஜிப்பூா் ரகுமான், மாவட்ட துணை செயலா் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா்.
அவா்களிடம் வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், தோட்டக்கலை துணை உதவி இயக்குநா் மலா், காவல் ஆய்வாளா் சக்திவேல் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் மத்திய அரசின் பங்குத்தொகை டிச. 20 ஆம் தேதிக்குள் பெறப்பட்டு மிளகாய் வெங்காயம், கொத்தமல்லி உள்ளிட்ட பயிா்களுக்கு விவசாயிகளின் வங்கி கணக்கில் இழப்பீடு தொகை வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. டிச. 20ஆம் தேதிக்குள் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையெனில் டிச. 21ஆம் தேதி முதல் மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனா்.