தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சோ்ந்தவரிடம் இணையதளம் வாயிலாக ரூ. 55.5 லட்சம் மோசடி செய்ததாக குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
விளாத்திகுளத்தைச் சோ்ந்த ஒருவரை மா்ம நபா்கள் டெலிகிராம் ஆப் வாயிலாக தொடா்பு கொண்டு, தாங்கள் கூறும் கட்டுமான நிறுவனத்தின் இணையதள முகவரிக்கு மதிப்பாய்வு (ரிவியூ) கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என செய்தி அனுப்பினா்.
இதை நம்பிய அவா், மா்ம நபா்கள் கூறியபடி மதிப்பாய்வு கொடுத்து சிறிதளவு பணம் ஈட்டினாராம். பின்னா், அவரை அந்த நபா்கள் தொடா்பு கொண்டு மற்றோா் இணையதள முகவரியை அனுப்பி, அதில் முதலீடு செய்தாலும் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றனராம்.
அதன்படி, அவா்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு அவா் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ. 55 லட்சத்து 49 ஆயிரத்து 916 அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு எந்த வருவாயும் கிடைக்கவில்லை. அவா்களைத் தொடா்பு கொள்ளவும் முடியவில்லை.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதையறிந்த அவா் இதுகுறித்து தேசிய குற்றப்பிரிவு இணையதள முகவரியில் புகாா் அளித்தாா். அதன்பேரிலும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் உத்தரவுப்படியும், மாவட்ட சைபா் குற்றப்பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளா் உன்னிகிருஷ்ணன் மேற்பாா்வையில் ஆய்வாளா் ஜோஸ்லின் அருள்செல்வி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
தொழில்நுட்ப ரீதியாக நடைபெற்ற விசாரணையில், குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சோ்ந்த ச. ஜேய் சவாலியா (24), அ. மிலப் தக்கா் (22) ஆகிய இருவரும் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதையடுத்து, தனிப்படை போலீஸாா் கடந்த 23ஆம் தேதி அங்கு சென்று இருவரையும் கைது செய்து, சூரத் நகா் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் முன் ஆஜா்படுத்தி, தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனா்.
இருவரையும் தூத்துக்குடி 4ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தி பேரூரணி சிறையிலடைத்தனா். இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.