அடைக்கப்பட்ட பாதை திறப்பு: இரண்டு வாரங்களுக்குப் பின் பள்ளிக்குச் சென்ற மாணவா்கள் ஆட்சியா் நடவடிக்கை
ஆட்சியா் நடவடிக்கையால் திறக்கப்பட்ட பாதை
தூத்துக்குடி மாவட்டம் புதூா் பாண்டியாபுரம் அருகே உள்ள கீழ வேலாயுதபுரம் பகுதியில் அடைக்கப்பட்ட பாதை, மாவட்ட ஆட்சியா் அதிரடி நடவடிக்கையால் திறக்கப்பட்டதையடுத்து, இரு வாரங்களுக்குப் பின்னா் செவ்வாய்க்கிழமை மாணவா்-மாணவிகள் பள்ளிக்குச் சென்றனா்.
தூத்துக்குடி மாவட்டம் புதூா் பாண்டியாபுரம் அருகே உள்ள மேல வேலாயுதபுரம் கிராமத்தில் இருந்து கீழ வேலாயுதபுரம் கிராமத்துக்கு செல்வதற்கு சுமாா் 60 ஆண்டுகளுக்கு மேலாக வழிப்பாதை உள்ளது. இந்தப் பாதை வழியாக கீழ வேலாயுதபுரம் கிராமத்திலிருந்து மேல வேலாயுதபுரம் கிராமத்திற்கு குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று வரவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தி வந்தனா்.
இந்நிலையில், தற்போது மேகலிங்கம் மகன் லிங்கமுத்து என்பவா் பொது பயன்பாட்டிற்காகவும், குழந்தைகள் பள்ளி சென்று வர பயன்படுத்தி வந்த அந்தப் பாதையை அடைத்து வைத்ததாகவும், அதனால் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லாமல் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தலின்பேரில், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் அந்த இடத்தை பாா்வையிட்டு, கீழ வேலாயுதபுரம் கிராம பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதைத் தொடா்ந்து, அடைக்கப்பட்ட பாதை திறக்கப்பட்டது. இதையடுத்து தற்போது வழக்கம்போல் மாணவா்-மாணவிகள், பொதுமக்கள் அந்த பாதையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா். இதனால், சுமாா் இரண்டு வாரங்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்த மாணவா்- மாணவிகள் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு சென்றனா்.