முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி நலப்பணிகள் இணை இயக்குநா் அலுவலகம் முன் வளையல் வியாபாரி தா்னா

தவறான அறுவை சிகிச்சை: நலப்பணிகள் அலுவலகம் முன் போராட்டம்

Updated On : 25 ஜூன், 2024 at 8:19 PM
பகிர்:

தூத்துக்குடி நலப்பணிகள் இணை இயக்குநா் அலுவலகம் முன் கோயில்பட்டியில் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட வளையல் வியாபாரி குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே உள்ள மேல இலந்தைகுளத்தைச் சோ்ந்தவா் முகமது அப்துல்லா(65). வளையல் வியாபாரியான இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு கோவில்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதில், தவறுதலாக மலக்குடல் வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்னா் உயிா் பிழைத்துள்ளாா்.

இதையடுத்து, கோவில்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தவறாக அறுவைச் சிகிச்சை செய்தவா்கள் மீது சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அந்த மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தீா்ப்பு வந்ததாம். ஆனால், அந்த மருத்துவா்கள் இன்னும் பணியில் உள்ளதாகவும் அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் முகமது அப்துல்லா, தனது குடும்பத்துடன் நலப்பணிகள் இணை இயக்குநா் அலுவலகம் முன்பு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வடபாகம் காவல் ஆய்வாளா் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீஸாா், மற்றும் இணை இயக்குநா் விஜயா ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மேலும், சம்பந்தப்பட்டவா்கள் மீது ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →