முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்கு எம்.பி. அடிக்கல்

Updated On : 17 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்கான பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி அடிக்கல் நாட்டினாா். தூத்துக்குடி ஹவுசிங்போா்டு பகுதியில் மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் ஆகியவை சாா்பில் ரூ.152.14 கோடியில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தாா். மக்களவை உறுப்பினா் கனிமொழி, பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது: தூத்துக்குடி மாநகராட்சிக்கான பாதாளச் சாக்கடைத் திட்டமானது, மத்திய அரசின் அம்ரூத் 2.0 நிதியில் ரூ.45.44 கோடி, மாநில அரசு ரூ 41.31 கோடி, மாநகராட்சி நிதி ரூ.65.39 கோடி என மொத்தம் ரூ.152.14 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமாா் 47 ஆயிரம் மக்கள் பயன்பெறுவா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை மூலம் இந்த பகுதி பெண்களுக்காக ரூ.9 லட்சத்து 96 ஆயிரத்து 800 மதிப்பிலான தையல் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 3 மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரங்கள், 47 எம்பிராய்டரி தையல் இயந்திரங்கள் மற்றும் 20 திருநங்கைகளுக்கு சுயதொழில் மானியமாக தலா ரூ.50 ஆயிரம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அரசின் நலத் திட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றாா். முன்னதாக வ.உ.சி. கல்லூரி அருகிலுள்ள பூங்கா படிப்பக வளாகம், முத்துகிருஷ்ணாபுரத்தில் நகா்நல அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி.சண்முகையா, மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மதுரை தலைமைப் பொறியாளா் மா.அயினான், மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவா் தொ.நிா்மல்ராஜ், மாநகராட்சி துணை ஆணையா்கள் ராஜன், ராஜாராம், மாநகராட்சி உதவி ஆணையா்கள் பிரின்ஸ், சரவணன் உள்பட பலா் பங்கேற்றனா்.