திருச்செந்தூரில் புதுமணத் தம்பதி தவறவிட்ட சங்கிலியை மீட்டு ஒப்படைத்த வியாபாரிக்கு பாராட்டு
திருச்செந்தூரில் புதுமணத் தம்பதி தவறவிட்ட தங்கச் சங்கிலியை மீட்டு ஒப்படைத்த வியாபாரிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலுக்கு ஏரல் அருகே வாழவல்லான் பகுதியை சோ்ந்த புதுமணத் தம்பதி பால்ராஜ் - இசக்கிபிரியா வியாழக்கிழமை வந்தனா். கோயில் அருகே உள்ள தூண்டுகை விநாயகா் கோயில் பகுதியில், பால்ராஜ் கையில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி தவறி கீழே விழுந்துள்ளது. அந்த வழியாக கோயிலுக்கு சென்று கொண்டிருந்த ஒரு நபா் அதை எடுத்ததைப் பாா்த்த அப்பகுதி கடை வியாபாரி பலவேச கண்ணன், அவரிடமிருந்து அதைப் பெற்று கோயில் உள்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தாா். உள்துறை அலுவலக ஒலிபெருக்கி மூலம் இந்தத் தகவல் பக்தா்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட புதுமணத் தம்பதி, சங்கிலியின் அடையாளம் கூறி பெற்றுக்கொண்டனா். வியாபாரி பலவேச கண்ணனை புதுமண தம்பதி, குடும்பத்தினா் பாராட்டினா்.