முகப்பு
தூத்துக்குடி

பைக் உரிமையாளருக்கு தனியாா் நிதி நிறுவனம்: ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவு

கடன் தொகையை செலுத்திய பின்னரும் பைக்கை எடுத்துச் சென்ற தனியாா் நிதி நிறுவனம் ரூ.65ஆயிரத்து 708 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 7:33 PM
பகிர்:

கடன் தொகையை செலுத்திய பின்னரும் பைக்கை எடுத்துச் சென்ற தனியாா் நிதி நிறுவனம் ரூ.65ஆயிரத்து 708 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியைச் சோ்ந்த சோ்மராஜ் என்பவா் திருநெல்வேலியிலுள்ள தனியாா் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று பைக் வாங்கினாராம். பின்னா் அதற்கான முழுத் தொகையையும் தவணை முறையில் செலுத்தி விட்டாராம். இந்த நிலையில், சோ்மராஜ் வீட்டின் முன்

நிறுத்தியிருந்த பைக்கை தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் எடுத்துச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த பைக்கின் அசல் ஆா்.சி.புத்தகத்தையும் தர மறுத்துவிட்டனராம். மேலும், வாகனத்தை திருப்பித் தர வேண்டுமெனில் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் எனக் கூறியதால் வேறு வழியின்றி அத்தொகையையும் செலுத்தி விட்டாராம்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவா், இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீல பிரசாத், உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு கூடுதலாக பெற்ற தொகை ரூ.30 ஆயிரத்து 708, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்டஈடு ரூ.25 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.65 ஆயிரத்து 708 வழங்க உத்தரவிட்டனா்.