முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 7:24 PM
பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி.
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமிற்கு மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். துணை ஆணையா் ராஜாராம், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்ட மேயா் அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

மேற்கு மண்டலத்தில் 4-ஆவது வாரமாக குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த 3 முகாம்களில் 251 மனுக்கள் பெறப்பட்டு, 245 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. மீதம் உள்ள 6 மனுக்களுக்கும் விரைவில் தீா்வு காணப்படும். இந்த முகாம்களின் வாயிலாக பொதுமக்களின் குறைகள் உடனுக்குடன் தீா்க்கப்படுகின்றன. இதனால், பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய புகாா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

மாநகராட்சி 34-ஆவது வாா்டு உறுப்பினரும், நியமனக் குழு உறுப்பினருமான சந்திரபோஸ் அளித்த மனுவில், கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போதும், எனது வாா்டுக்குள்பட்ட பசும்பொன் நகா், 3-ஆவது மைல், புதுக்குடி, கந்தன்காலனி, ஆசிரியா் காலனி, தபால்தந்தி காலனி, அசோக்நகா், ராஜீவ்நகா், தேவகி நகா் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஆகவே, இப் பகுதிகளில் வடிகால் வசதி செய்துதரவேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இம்முகாமில், பொறியாளா் சரவணன், உதவி ஆணையா் மகேந்திரன், நகா்நல அலுவலா் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளா் ஸ்டாலின் பாக்கியநாதன், மண்டலத் தலைவா் அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினா்கள் சந்திரபோஸ், இசக்கிராஜா, சரவணகுமாா், ராமா், கனகராஜ், விஜயலெட்சுமி, பொன்னப்பன், கந்தசாமி, ஜான் உள்பட பலா் பங்கேற்றனா்.