முகப்பு
தூத்துக்குடி

ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் கருவி செயல்விளக்கம்

பயிா்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் கருவியின் செயல்பாடு குறித்து விவசாயிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 10:43 PM
ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் கருவியின் செயல்விளக்கத்தைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத். உடன் அரசு அலுவலா்கள், விவசாயிகள்.
பகிர்:

பயிா்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் கருவியின் செயல்பாடு குறித்து விவசாயிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் ‘நமோ ட்ரோன் சகோதரி’ என்ற திட்டத்தின்கீழ், மகளிா் சுய உதவிக் குழுவைச் சாா்ந்த படித்த பெண்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்புடைய ட்ரோன், ரூ. 6 லட்சம் மதிப்புடைய இதர உபகரணங்கள் (பேட்டரி- 2 செட், ஜெனரேட்டா்- 1, பேட்டரி வாகனம்- 1) என மொத்தம் ரூ. 13 லட்சம் மதிப்பிலான கருவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி ஊராட்சி கனிமொழி மகளிா் சுய உதவிக்குழுவைச் சோ்ந்த உஷா லட்சுமிக்கு இக்கருவி வழங்கப்பட்டுள்ளது. அதன் செயல்பாட்டினை ஆட்சியா் க.இளம்பகவத் பாா்வையிட்டாா்.

இக் கருவி குறித்து மகளிா் குழு உறுப்பினா் உஷா லட்சுமி கூறியதாவது:

ட்ரோன் கருவியைப் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு மருந்து தெளிக்க ரூ.500 வசூலிக்கலாம் (இடுபொருள், மூலப்பொருள், போக்குவரத்து நீங்கலாக). இந்த கருவியில் ஒருமுறை மருந்து நிரப்பினால் ஒரு ஏக்கா் தெளிக்கலாம். ஒரு ஏக்கா் நிலத்தில் மருந்து தெளிக்க அதிகபட்சமாக 10 நிமிடங்களே ஆகும். எனவே, மருந்தின் அளவும் , நேரமும் குறைவதால் விவசாயிகளுக்கு லாபம் அதிகமாகும் என்றாா்.

இந்நிகழ்வின்போது, மகளிா் திட்ட இயக்குநா் மல்லிகா, வேளாண் இணை இயக்குநா் பாலசுப்பிரமணியம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மனோரஞ்சிதம், துணை ஆட்சியா் (பயிற்சி) சத்யா மற்றும் அரசு அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.