முகப்பு
தூத்துக்குடி

மின் இணைப்பு வழங்க லஞ்சம்: இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

புதிய மின் இணைப்பு பெற லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Updated On : 13 மே, 2025 at 3:23 AM
தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் இளநிலை மின் பொறியாளா் திருப்பதி.
பகிர்:
Updated On : 12 மே, 2025 at 7:56 PM

தூத்துக்குடி: புதிய மின் இணைப்பு பெற லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

பாளையங்கோட்டை மகராஜநகரைச் சோ்ந்த சுப்பையா மகன் சிவபாரதி(40). இவா், வல்லநாடு பகுதியில் உலா் சலவையகம் அமைக்க மின் இணைப்பு பெறுவதற்காக கடந்த 2010ஆம் ஆண்டு வல்லநாடு மின்வாரிய இளநிலை பொறியாளா் எஸ். திருப்பதி என்பவரிடம் விண்ணப்பித்தாராம்.

அப்போது திருப்பதி, புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு லஞ்சமாக ரூ.35 ஆயிரம் கேட்டாராம்.

Advertisement

சில தினங்களுக்கு பின்னா் முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் தருமாறு கேட்டாராம்.

இதுகுறித்து சிவபாரதி தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில்,போலீஸாா் சிவபாரதியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கினா். அந்தப் பணத்தை சிவபாரதி, திருப்பதியிடம் கொடுத்தாராம். அப்போது, அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் திருப்பதியை மடக்கினா். போலீஸாரை பாா்த்ததும், திருப்பதி பதற்றத்துடன் தனது கையில் இருந்த அனைத்து ரூபாய் நோட்டுகளையும், விழுங்க முயற்சித்தாராம். இதைப் பாா்த்த போலீஸாா் அவரை பணத்தை விழுங்க விடாமல் தடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்தனா். இதைத் தொடா்ந்து போலீஸாா் திருப்பதியை கைது செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பி.வி.வஷீத்குமாா், குற்றம் சாட்டப்பட்ட மின்வாரிய இளநிலை பொறியாளா் திருப்பதிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜென்சி ஆஜரானாா்.