தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3ஆவது அலகில் பழுது ஏற்பட்டதையடுத்து, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலமாக சுமாா் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாா்ச் 15ஆம் தேதி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, முதலாவது மற்றும் இரண்டாவது அலகுகள் முற்றிலும் எரிந்து சேதமானது.
இந்நிலையில் 4 மற்றும் 5ஆவது அலகுகள் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு, 3ஆவது அலகில் மட்டும் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் 3ஆவது அலகிலும் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பழுதுநீக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
இதனால், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளிலும் மின்உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, மொத்தம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தடைபட்டுள்ளது.