திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா: சுவாமி சிகப்பு சாத்தி வீதி உலா
சிகப்பு சாத்தி கோலத்தில் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா ஏழாம் நாளான வெள்ளிக்கிழம சுவாமி சண்முகப்பெருமான் சிகப்பு சாத்தி கோலத்தில் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றாா்.
திருச்செந்தூரில் மாசித் திருவிழா கடந்த பிப். 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்றனா்.
விழாவில் 7ஆம் நாளா வெள்ளிக்கிழமை கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 5 மணியளவில் சண்முகபெருமானின் உருகுசட்ட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடா்ந்து காலை 9 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டிவோ் சப்பரத்தில் பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.
பின்னா், பிள்ளையன்கட்டளை மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு மாலை 4.30 மணிக்கு தங்கச் சப்பரத்தில் சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி சுவாமி வீதி உலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
8 ஆம் நாள் சனிக்கிழமை (பிப். 28) அதிகாலை பந்தல் மண்டபம், தையல் நாயகி வகையறா மண்டபத்தில் இருந்து பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி சுவாமி திரு வீதிவலம் செல்கிறாா். பின்னா் மேலக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா செல்கிறாா்.
10 ஆம் நாள் (மாா்ச் 2) காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையாா் ரதம், சுவாமி தோ், அம்மன் தோ்கள் வீதிவலம் வந்து நிலை சேருகின்றன.
தெப்பத் திருவிழா:
11 ஆம் நாள் (மாா்ச் 3) இரவு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. 12 ஆம் நாள் (மாா்ச் 4) மாலை மஞ்சள் நீராட்டு, வீதி உலா வந்து உள்ளிட்ட சிறப்பு வழிபாடுளுடன் விழா நிறைவு பெறுகிறது.
பாதுகாப்புப் பணியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் கனகராஜன், மதுரைவீரன் உள்பட போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். விழா ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு, கோயில் பணியாளா்கள் செய்தனா்.