முகப்பு
தூத்துக்குடி

பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: உறவினா்கள் முற்றுகை, சாலை மறியல்

Updated On : 12 மார்ச், 2026 at 10:47 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி காட்டுப் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள், கிராம மக்கள் தூத்துக்குடியில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி, அந்தப் பகுதியில் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று பொதுத் தோ்வு எழுதி வந்தாா். அவா், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) மாலை 6 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றாா்.

வெகுநேரம் ஆகியும் அவா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சுப்புராஜ், விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை (மாா்ச் 11) காலை புகாா் அளித்தாா். போலீஸாா் மாணவியைத் தேடி வந்த நிலையில், புதன்கிழமை மாலையில் வேடநத்தம் காட்டுப் பகுதியில் முகம், உடலில் காயங்களுடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் மாணவியின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்குசென்று மாணவியின் சடலத்தை மீட்டு தூத்துக்குடி, அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

அப்போது குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும், உரிய இழப்பீடு கோரியும் மாணவியின் பெற்றோா், உறவினா்கள் குளத்தூா்-குறுக்குச்சாலை பகுதியில் புதன்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதன் உள்பட போலீஸாா் அங்கு சென்று மாணவியின் பெற்றோா், கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடி வருவதாகக் கூறினா்.

முற்றுகை, மறியல்:

இதை ஏற்க மறுத்த உறவினா்கள் வியாழக்கிழமை காலை தூத்துக்குடி, அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தைத் தொடா்ந்தனா். பேச்சுவாா்த்தைக்குப் பின் பிரேத பரிசோதனைக் கூடத்துக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது.

தொடா்ந்து, தூத்துக்குடி மாநகரில் பாளையங்கோட்டை பிரதான சாலை விவிடி சிக்னலில் மாணவியின் உறவினா்கள், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா் மறியல் கைவிடப்பட்டது.

நிவாரணம் தரக் கோரிக்கை:

இதுகுறித்து ஊா்மக்கள் கூறுகையில், காவல் துறையின் அலட்சியமே காரணம். சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணம், குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றனா்.

கழுத்து எலும்பு உடைந்திருப்பதாகத் தகவல்:

மாணவியின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உடற் கூறாய்வில் மாணவியின் கழுத்து எலும்பு உடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அவா், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது குறித்து திருநெல்வேலி தடய அறிவியல் மைய ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →